ஞாயிறு, 9 மார்ச், 2014

தமிழ் இலக்கணம்.-எழுத்தியல்.

மரியாதைக்குரியவர்களே,
                         வணக்கம்.
     அன்னை பூமி தமிழே....... வலைப்பக்கத்திற்கு தங்களை இனிதே வரவேற்கிறோம்.இங்கு வீரமாமுனிவரின் சுருக்கமான  எளிய தமிழ் இலக்கணம் பற்றி காண்போம்.

       முதல் பகுதி;-எழுத்ததிகாரம்,. இந்த எழுத்ததிகாரத்தில் எழுத்தியல் மற்றும் எழுத்துப் புணரியல் என இருபகுதிகள் உள்ளன.
                                      
                                I - எழுத்தியல்.
      
(1) தமிழ் மொழியின் எழுத்துக்கள் எத்தனை வகைப்படும்?
                  தமிழ் மொழியின் எழுத்துக்கள்  உயிரெழுத்து,மெய்யெழுத்து,ஆய்த எழுத்து,உயிர்மெய்யெழுத்து என நான்கு வகைப்படும்.

(2) உயிரெழுத்துக்கள் எவை?
      அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஔ ஆகியன உயிரெழுத்துக்கள் ஆகும்.

(3)குற்றெழுத்து எவை?
        அ,இ,உ,எ,ஒ  ஆகிய ஐந்தும் குற்றெழுத்து ஆகும்.

(4)நெட்டெழுத்து எவை?
           ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ  ஆகிய ஏழு எழுத்துக்களும் நெட்டெழுத்து எனப்படும்.

(5) உயிரெழுத்துக்களில் சுட்டெழுத்து எவை?
             அ,இ,உ இந்த மூன்று எழுத்துக்களும் சுட்டெழுத்து ஆகும்.இம்மூன்றும் ஒரு பொருளை,அல்லது இடத்தை சுட்டிக்காட்டுகிறது.
             உதாரணமாக, அவன்,இவன்,உனது, இதுபோல பல சுட்டுபவைகளை சிந்தித்து பார்க்கவும்.

(6)வினாவெழுத்து எவை? 
                   ஆ,எ,ஏ,ஒ என்ற    எழுத்துக்களும், இதனுடன் ' யா' என்ற உயிர்மெய்யெழுத்தும் வினாப்பொருளை உணர்த்துவதால்  இவை வினாவெழுத்து ஆகும்.
உதாரணம்;-அவனா?,இவனா?,எப்படி?,எவன்?,ஏன்?,எங்கே?, அதுவோ?,யாருக்கு?,யாவை?.

(7)மெய்யெழுத்து எவை?
             க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துக்கள் ஆகும்.
(8)வல்லெழுத்து எத்தனை?
வல்லின எழுத்து ஆறு அவை;-க்,ச்,ட்,த்,ப்,ற்  ஆகிய எழுத்துக்கள்  ஆகும்.

(9)மெல்லெழுத்து எத்தனை?
             மெல்லின எழுத்து ஆறு அவை;-ங்,ஞ்,ண்,ந்,ம்,ன் ஆகிய எழுத்துக்கள் ஆகும்.

(10)இடையெழுத்து எத்தனை? 
            இடையின எழுத்து ஆறு,அவை;- ய்,ர்,ல்,வ்,ழ்,ள் ஆகிய எழுத்துக்கள் ஆகும்.

(11)ஆய்தவெழுத்து எது? காரணம் கூறு?
           சில இடங்களில் உயிர் போலவும்,சில இடங்களில் மெய் போலவும் ஒலித்து,உயிருமாகாமல் மெய்யும் ஆகாமல் தனிநிலையாய் நின்று ஒலிப்பது ஆய்த எழுத்து ஆகும்.அதன் வடிவம் ஃ ஆகும்.

(12) உயிர்மெய் எழுத்து எவை?
           மெய்யெழுத்து பதினெட்டும் உயிரெழுத்து பன்னிரண்டும் இணைந்து வருகிற 'க' முதல் 'னௌ' வரையிலான இருநூற்றுபதினாறு (216) எழுத்துக்களும் உயிர்மெய் எழுத்துக்களாகும்.

(13)குற்றியலுகரம் என்பது யாது?
              மொழிகளின் கடைசியில் தனிக்குறில் ஒழிந்த மற்ற எழுத்துக்களின் பின்னால் வல்லெழுத்தை ஊர்ந்து வரும்  'உ'கரம் குற்றியலுகரம் எனப்படும்.
          உதாரணம்;- 
      நாகு,இஃது,வரகு,எழுத்து,குரங்கு,சால்பு போன்றவை குற்றியலுகரம் ஆகும்.

     (தனிக்குறில் ஒழிந்த என்றால் தனியாக குறில் எழுத்தை மட்டும் கொண்ட வார்த்தைகள் தவிர மற்றவை என அறியவும். )

(14)குற்றியலிகரம் என்பது யாது?
                 வருமொழி முதலில் 'ய'கரம் வரின் நிலைமொழி ஈற்றுக் குற்றியலுகரம் கெட ,அவ்விடத்து  'இ'கரம் தோன்றும்;அந்த இடம் குற்றியலிகரம் ஆகும்.
      உதாரணம்;- 
                 செய்வது+யாது = இதில் நிலை மொழி என்பது 'செய்வது' வருமொழி,'யாது'  என்பதை நன்கு அறிக. இந்த யாது என்னும் வருமொழியின் முதலில்' யா' வந்துள்ளதால் ,செய்வது என்னும்  நிலைமொழியின் ஈற்று எழுத்து 'து'என்னும் 'உ'கரம் கெட்டு அந்த இடத்தில் 'இ'கரம் தோன்றி உள்ளது கவனிக்கவும். அதனால் ''செய்வதியாது'' என ஒலிக்கப்பட்டது.
அடுத்த பதிவில்,''எழுத்துப் புணரியல்'' இலக்கணம் தொடரும்................

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக